கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்துவந்த ஒருவரிடம் அதனை வாங்கி அருந்தியவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஜெகதீஷ், பிரவீன், சேகர், சுரேஷ் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஷர்வண் குமார், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் ரத்த மாதிரிகள் விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முழு பரிசோதனை அறிக்கை வந்த பின்பே கள்ளச்சாராய உயிரிழப்பா என உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.