வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது.
உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தற்போது அசாமில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், சுமார் 4 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளப் பாதிப்பு தொடர்பாக டெல்லி நார்த் பிளாக் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் இயற்கை பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் பல்வேறு அமைச்சக செயலர்கள் பங்கேற்றனர்.