டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடத்தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 116 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. மேலும், மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
எனினும் 17 புள்ளி 5 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுடன் வங்காளதேச அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
டி-20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற சம்பவம், அந்நாட்டு மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள கோஸ்ட் மற்றும் பக்கிடா மாகாணங்களில் ரசிகர்கள் அதிக அளவில் கூடி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.