பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாயாவதி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தப் பிரச்சினையை தாங்கள் தீவீரமாக கருதுவதாகவும், இந்த வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்ய மாநில அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டுமென அழைப்பு விடுத்த மாயாவதி, அதற்காக சட்ட வரம்பெல்லையை மீறக் கூடாது என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை, குறிப்பாக பட்டியலின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உடனிருந்தார்.