இன்னும் 38 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக இருக்கும் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அண்மையில் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், 2024ம் ஆண்டில் 820 மில்லியனாக இருக்கும் உலக மக்கள் தொகை 2080 ஆம் ஆண்டு உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 50-60 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை அதிகபட்சமாக 1030 கோடியைத் தொடும் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 1020 கோடியாக குறையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியது.
தற்போது இந்திய மக்கள் தொகை 145 கோடியாகும். நடப்பு நூற்றாண்டு முழுவதிலுமே இந்தியா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் என்று கணித்த ஐ.நா அறிக்கை, 2054ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 169 கோடியாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2062ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை இந்தியாவின் மக்கள்தொகை படி படியாக குறையத் தொடங்கும். 2062ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடி என்ற உச்சத்தைத் தொடும் என்றும், அதன்பின் படிப்படியாக குறையும் எனவும் அந்த அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது.
இப்போது, அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நாடான இந்தியாவுக்கு அடுத்தபடியாக 1.419 பில்லியன் மக்கள் தொகையுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 345 மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
2054 ஆம் ஆண்டு, இந்தியாவும் சீனாவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் முதல் இரண்டு இடத்தைத் தக்க வைத்து கொள்ளும் நிலையில், மூன்றாவது இடத்தை 389 மில்லியன் மக்கள்தொகையுடன் பாகிஸ்தான் பெற்றுவிடும் என்கிறது இந்த ஐ.நா.அறிக்கை. 21 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த தரவரிசை தொடரும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்போது 8.16 பில்லியனாக இருக்கும் உலக மக்கள் தொகை 2080 ஆம் ஆண்டுகளில் உச்சத்தை எட்டும் என்று தெரிவித்துள்ள ஐநா அறிக்கை, அடுத்த அறுபது ஆண்டுகளில் உலக மக்கள் தொகை அதிகபட்சமாக 1030 கோடியை எட்டும் என்று கூறுகிறது.
அங்கோலா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜர் மற்றும் சோமாலியா ஆகிய 9 நாடுகளின் மொத்த மக்கள் தொகை அடுத்த 30 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
சீனா, இத்தாலி, கொரியா குடியரசு மற்றும் ஸ்பெயின் உட்பட அனைத்து நாடுகளிலும் பெண்களின் கருவுறுதல் விகிதம் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு, 1990ம் ஆண்டை விட கணிசமான அளவில் குறைந்து வருகிறது . எனவே, இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 1020 கோடியாக குறையும் என்றும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
இதன் படி, 2080 ஆம் ஆண்டில், உலகில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை விடவும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக இருப்பார்கள் என்று தெரிய வருகிறது.