இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு ஆண்டுக்கு சுமார் 12 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு சலுகைகள் அவருக்கு வழங்கப்படவுள்ளன.
அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. அந்த தொடரோடு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வுபெற்றார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊதியம் தொடர்பாக அவருக்கு பிசிசிஐ-க்கும் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டதால்தான் நியமனம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. முன்னாள் பயிற்சியாளர் டிராவிட்டை விட கம்பீருக்கு அதிக ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. டிராவிட் ஆண்டுக்கு சுமார் 10 கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாகவும், கம்பீருக்கு ஆண்டுக்கு சுமார் 12 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் ரூபாய், BUSINESS CLASS விமானப் பயணங்கள், உலகத்தரம் வாய்ந்த தங்குமிடம் போன்ற சலுகைகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இளம் வயதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்திருக்கும் கவுதம் கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் 2003-ஆம் ஆண்டு தொடங்கியது. வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் கம்பீர். அதைத்தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.
2007-ஆம் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அதே போல் 2011-ல் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 154 ரன்களையும், 147 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 238 ரன்களையும் அடித்துள்ளார் கம்பீர்.
ஐ.பி.எல்.லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2018-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு கே.கே.ஆர். அணிக்காக பணியாற்றி வந்தார். அவரது வழிகாட்டுதலில் நடப்பாண்டில் ஐ.பி.எல். கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மாடர்ன் கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனித்து வருபவர் என்ற அடிப்படையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அடுத்து நடைபெற இருக்கும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை போன்ற முக்கிய ஐ.சி.சி. தொடர்களில் கம்பீரின் வழிகாட்டுதல்படியே இந்திய அணி செயல்படப் போகிறது. எனவே அவர் முன்பு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
நட்சத்திர வீரர்களை கையாள்வது, மூத்தவர்களின் அனுபவத்தையும் இளம் வீரர்களின் துடிப்பையும் ஒன்று சேர்ப்பது, நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப அணிக்குள் புதுமையை புகுத்துவது, பணிச்சுமையை குறைத்து சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்துவது, ஊடகங்களை கையள்வது என பல்வேறு சவால்களை கம்பீர் சமாளிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் களத்தில் சக வீரர்கள் மற்றும் நடுவர்களோடு மோதல் போக்கை கடைப்பிடித்தது, செய்தியாளர் சந்திப்பில் கோபப்படுவது போன்ற சர்ச்சைகளில் கம்பீர் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.