அமெரிக்காவை மாற்றும் சக்தி மக்களின் கைகளில் இருக்க வேண்டுமே தவிர கொலையாளிகளின் கைகளில் இருக்கக்கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜோ பைடன்,
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காக தாம் தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும், வன்முறையை வழக்கமாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
விவாதங்கள், திட்டங்கள் மூலமாகவே வேட்பாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, தோட்டாக்களால் அல்ல என்றும், ஜோ பைடன் கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள், நாட்டின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்றும் ஜோ பைடன் கூறினார்.