20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவெடுத்து குழந்தைகளை குறி வைத்து தாக்கும் சந்திபுரா வைரஸில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ராப்டோவிரிடே என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சந்திபுரா வைரஸ், என்செஃபலிடிஸ் என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்செஃபலிடிஸ் என்பது மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கும். இதனால், பக்கவாதம், கோமா, சில நேரங்களில் உயிரிழப்புக்கூட ஏற்படலாம். மேலும், அதிகமான காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு, விரைவாக கோமாவுக்கு இட்டுச் செல்வது ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
இந்த வைரஸ், கடந்த 1960ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திப்புரா பகுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தான் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்புரா வைரஸ் தற்போது மீண்டும் உருவெடுத்து குஜராத்தில் சாபர்கந்தா மாவட்டத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வருகிறது. இந்த நோய் பரவும் வேகமும், அதன் தீவிரத்தன்மையும், அதிகமான இறப்பு சதவீதத்தை ஏற்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குஜராத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சந்திப்புரா வைரஸ் பரவி, அண்மையில் 15 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது 6 வயது ஆண் குழந்தை , 4 வயது பெண் குழந்தை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவிக்கிறது. சந்திப்புரா வைரஸ் தமிழ்நாட்டில் பரவ வாய்ப்புகளே இல்லை என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் செல்வ விநாயகம்.
குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களே இந்த வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மணல் பூச்சிகளால் உருவாகும் சந்திபுரா வைரஸ் மனிதர்களிடமிருந்து நேரடியாக மனிதருக்கு பரவாது என்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமார்.
டெங்கு, கொரோனா போன்றே சந்திப்புரா வைரஸை நேரடியாகத் அழிப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், உடம்பில் ஏற்படும் அறிகுறிகளைத் தணிக்க மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்திப்புரா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சந்திப்புரா நோய் பரவலைத் தடுக்க முழு கை கால் சட்டை அணிய வேண்டும், கொசு விரட்டிகள், கொசு வலைகள் பயன்படுத்த வேண்டும், வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும், வீட்டைச் சுற்றி தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டும், சுவர்களில் இருக்கும் விரிசல்கள், ஓட்டைகளை அடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.