பிரதமர் மோடி இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் இலங்கை செல்வதாக அறிவிக்கப்பட்டது. அண்மையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றபோது கூட பிரதமர் மோடியின் பயணம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி, ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது.
இதில் ஒரு மீனவர் பலியான நிலையில், இருவர் இலங்கை கொண்டு செல்லப்பட்டனர். இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
இந்த ஒரு நிகழ்வு மட்டுமின்றி, இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.