தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பாக மீனவர் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நடந்து வருவதாகவும், இதனை தடுக்க இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் வாதிட்டார்.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், மீனவர்கள் கைது சம்பவங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் அவ்வப்போது விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து வாதிட்ட அவர், மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண, இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை விரைவில் நடத்தி, இது சம்பந்தமாக விவாதிக்க உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இறுதியாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வாதத்தைப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.