ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் நீர் நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசையையொட்டி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார். மேலும், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசையையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். காவிரி கொள்ளிடம் கரையோரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
கன்னியாகுமரி கடலில் அதிகாலை 2 மணி முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். குழித்துறை தாமிரபரணி நதிகரையில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாச நாதர் சுவாமி கோயில் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர். இதே போன்று, வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.