பாரீஸ் ஒலிம்பிக் 50 கிலோ மல்யுத்த இறுதி போட்டியில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடி அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வினேஷ் போகத் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியனாக திகழ்ந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் பெருமையாக வினேஷ் போகத் திகழ்வதாகவும், ஒவ்வொருவருக்கும் அவர் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும், வார்த்தைகளால் அவருக்கு ஆறுதல் சொல்ல இயலாது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டுவரும் திறன் வினேஷ் போகத்துக்கு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, சவால்களை எதிர்கொள்வது அவருக்கு வாடிக்கையான ஒன்று என்றும் கூறியுள்ளார்.
பின்னர், பாரீஸில் உள்ள இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக முறையிடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.