சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
மக்களவைத் தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், மனிதகுலம் இதுபோன்ற வாக்காளர் எண்ணிக்கையை இதுவரை கண்டதில்லை என பெருமிதம் தெரிவித்தார்.
2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 8 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாகவும், இதன்மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தொடங்கப்பட்ட கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் இன்றளவும் தொடருவதற்கு பாராட்டு தெரிவித்த குடியரசுத் தலைவர், இதனால் வறுமையிலிருந்து ஏராளமானோர் மீண்டதாக பெருமை தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளை ஊக்குவித்து புத்தாக்க நிறுவனங்கள் பெருகவும், முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா விளங்குவதாகவும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்ததன் மூலம் தெற்குலகின் குரலாக இந்தியா பரிணமித்ததாக கூறிய அவர், உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா அதன் செல்வாக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.
தேச பிரிவினையின் துயரத்தை நினைவுகூர்ந்து, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ், பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் ஆகியோரது பங்களிப்பை திரெளபதி முர்மு போற்றினார்.