நிபந்தனைகளை விலக்கி கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசு நிலங்களை கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி சம்பந்தமான கோரிக்கை மனுவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கோவையின் வளர்ச்சி மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களின் வளார்ச்சிக்கான கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான மத்திய அரசின் பணிகளுக்கு மாநில அரசால் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில், நில எடுப்புக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் நீக்குவதற்கு முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாக கூறினார்.
கோவை மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளான், ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சரிடம் வழங்கியிருப்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.
திமுக – பாஜக உறவு பற்றிய கதைகளுக்குள் செல்ல விரும்பவில்லை எனக் கூறிய வானதி சீனிவாசன், எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் எங்களின் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக கூறினார்.
மத்திய அரசின் பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாட்டின் பிரதமர் உட்பட அமைச்சர்களில் 99 சதவிகிதம் பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் எனவும், நாட்டையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் இது போன்ற கேள்விகள் ஏற்புடையதல்ல என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.