யுபிஎஸ்சி லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி பணி நியமன விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை செயல் அதிகாரிகளை நேரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 10 இணைச் செயலர்கள், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என யுபிஎஸ்சி அண்மையில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ததாகவும்,
அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணி நியமன விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சமத்துவம் மற்றும் சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் நேரடி நியமன முறையை நடைமுறைப்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் குறிப்பிட்டுள்ளார்.