உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். ஆதிகைலாஷுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து செய்வதறியாது திகைத்த அவர்கள் 30 பேரும் அங்குள்ள ஆசிரமத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். போதிய உணவு இல்லாமலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் அவர்கள் அவதிப்பபட்டு வந்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட 30 பேரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்.