பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கல்விக் கண் திறந்தவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப் படும் காமராஜரின் நினைவு தினம் இன்று. எளிமைக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பெயர் பெற்ற பெருந்தலைவர்… காலமெல்லாம் தன்னலம் கருதாது மக்கள் நலன் சார்ந்தே செயல்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நினைவைப் போற்றும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.
தன்னிகரில்லா தலைவனாக இன்றளவும் போற்றப்படுகின்ற கர்ம வீரர் காமராஜர்,1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில், குமாரசுவாமி-சிவகாமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலே தந்தை இறந்த காரணத்தால், ஆறாம் வகுப்போடு காமராஜரின் படிப்பு நின்று போனது.
சுதந்திரப் போராட்டம் நாடெங்கும் பரவியிருந்த நேரமது. 1919ஆம் ஆண்டு தனது 16 வது வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனது 18 வது வயதில், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் காமராஜர் பங்கெடுத்தார்.
1930ஆம் ஆண்டில், வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, காமராஜர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றார். அடுத்தடுத்து,சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
1940 ஆம் ஆண்டு தொடங்கி 14ஆண்டுகள், தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பதவி வகித்த காமராஜர், 1954ல் தமிழ்நாட்டின் முதல்வரானார். 1963ஆம் ஆண்டுவரை 9 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்தார். எட்டு பேரைக் கொண்ட சின்னஞ்சிறிய அமைச்சரவையுடன் நாட்டு மக்களுக்குப் பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய பணிகள் இன்றும் மக்களுக்கு நன்மையளித்துக் கொண்டிருக்கின்றன.
தனது ஆட்சி காலத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்ததால்,கல்விக் கண் திறந்த காமராஜர் என்று போற்றப்படுகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது காமராஜரின் முக்கியக் கொள்கையாக இருந்தது.
பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் காமராஜர் உறுதி செய்தார். பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக பள்ளி சீருடைத் திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு, மகத்தான மதிய உணவுத்திட்டத்தின் மூலம்,பள்ளி மாணவர்களின் வயிறு நிறைய வைத்தார்.
ஆழியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் பல கட்டி, பாசன வசதியால் விவசாயம் செழிக்க வழிவகை செய்தார். என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை உருவாக்கி, தமிழகத் , தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார். அதனாலேயே, காமராஜர் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று போற்றப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்த பெருந்தலைவர் காமராஜர்,1964 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற்றுக் கொண்டார். 1967 ஆம் ஆண்டு வரை, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த,பெருந்தலைவர் காமராஜர், மூன்று முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த கிங் மேக்கராக திகழ்ந்தார்.
நாட்டின் சோதனையான காலக் கட்டத்தில், நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் பிரதமராகத் தேர்வுசெய்து, தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக பெருந்தலைவர் காமராஜர் விளங்கினார்.
1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவிலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜர், கடைசி வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு, இந்திய அரசு, பெருந்தலைவர் காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது.
தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிய கர்ம வீரர் காமராஜர், நேர்மை, எளிமை, தூய்மை இவற்றின் அடையாளமாக வாழ்ந்து வந்தார். சத்தியத்தை வலியுறுத்திய மகாத்மா காந்தியின் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து வந்த கர்ம வீரர் காமராஜர், காந்தியடிகளின் பிறந்தநாளில் உலகை விட்டு மறைந்தார்.
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், 3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்,14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கர்ம வீரர் காமராஜர், மறையும் போது அவரிடம் மிச்சம் இருந்தது வெறும் பத்து கதர் வேட்டிகள், நான்கைந்து சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே. தனக்கென்று எந்த சொத்தையும் சேர்த்து வைக்காத கர்ம வீரர், பொற்கால ஆட்சி நடத்தி, நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து தந்திருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் புகழ் காலம் உள்ளளவும் நிலைத்திருக்கும்.