நவராத்திரி தொடங்கியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவராத்திரி காலத்தில் முப்பெரும் தேவியர்களான துர்கா, சரஸ்வதி, லட்சுமி மட்டுமின்றி, துர்க்கையின் ஒன்பது வடிவங்களையும் போற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். நடப்பாண்டுக்கான நவராத்திரி திருவிழா தொடங்கிய நிலையில், டெல்லியில் உள்ள ஜாண்டேவாலன் அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மும்பை ஸ்ரீ மும்பா தேவி அம்மன் கோயிலில் நவாரத்திரி முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரானைகள் காண்பிக்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஹரியானா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா பீமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரியின் முதல் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தில் உள்ள தேவ்காளி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். இதேபோல, பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அலோபி சங்கரி அம்மன் கோயில், வாரணாசியில் உள்ள அஷ்ட புஜி அம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.