அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவலளித்த ரயில்வே ஊழியரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்னைக்கு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் தீடீரென சத்தம் கேட்டது. இதனை கவனித்த ரயில்வே ஊழியர் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு சத்தமிட்டார்.
ஆனால் ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்ததால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், அருகே சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 30 நிமிடம் தாமதமாக மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.