உலகப் புகழ் பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மேலும், காப்பு கட்டி மாலை அணிவித்து காளி, முருகன், விநாயகர், அனுமான், உள்பட பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கைகளை பிரித்து உண்டியலில் பக்தர்கள் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழாவை ஒட்டி காளி பூஜை, அன்னதானம், சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து வேடமணியும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோயிலுக்கு வந்து அர்ச்சகர் கையால் காப்பு அணிந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தென்மண்டலம் முழுவதும் உள்ள காவல்துறையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.