இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத் தரக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். மேலும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்டுத்தர வலியுறுத்தி, அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு சார்பில், தங்கச்சிமடம் பகுதியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், மீனவ குடும்பங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.