கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவார பகுதியான கல்லாறு எனுமிடத்தில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழப்பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணை யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதாகவும், அதனால் பண்ணையை மூட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 3 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தது. இந்நிலையில் அந்த குழுவினர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்லாறு அரசு பழப்பண்ணையில் ஆய்வு செய்தனர்.
அப்போது மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் தலைமையிலானோர், கல்லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற குழுவினரிடம் மனுக்களை அளித்தனர்.
இதுகுறித்து பேசிய ஏ.கே.செல்வராஜ், 120 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழப்பண்ணையை தற்போது திடீரென யானை வழித்தடம் என கூறுவதை ஏற்க இயலாது என கூறினார்.