தமிழகத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளயிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வட தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என்றும் அந்த மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.