சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 5-ம் தேதி பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர் சுந்தரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சுந்தரை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுந்தருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, தாக்குதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.