ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவின் மறைவால், கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பி, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார் எனவும் புகழாரம் சூட்டினார். ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவுடன் தாம் மேற்கொண்ட எண்ணற்ற சந்திப்புகள் என் மனதில் நிறைந்திருக்கின்றன என கூறியுள்ளார். மேலும், தாம் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன் என்றும். பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் டெல்லி வந்தபோதும் இந்த சந்திப்புகள் தொடர்ந்தாகவும், அவரது மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது நன்மதிப்பு கொண்டவர்களுடன்
உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தமளிப்பதாகவும். இந்திய தொழில்துறையின் உண்மையான கலங்கரை விளக்கமாக ரத்தன் டாடா விளங்கினார் எனவும் கூறியுள்ளார்.
அவரது இழப்பின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.