திருப்பதி ஏழுமலையானுக்கு 29 ஆண்டுகளாக இஸ்லாமிய சகோதரர்கள் இசையின் மூலம் தொண்டு செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சகோதரர்கள்…? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் காசிம் மற்றும் பாபு ஆகிய இரு இஸ்லாமிய சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இருவரும் தங்களுடைய நாதஸ்வரம் வாசிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றதோடு திருப்பதி ஏழுமலையானுக்கும் இசையின் மூலம் தொண்டு செய்து வருகின்றனர்.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கரவாடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட காசிம்- பாபு சகோதரர்கள் தற்போது ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய தாத்தா பத்மஸ்ரீ ஷேக் சின்ன மௌலானா. மிகச் சிறந்த நாதஸ்வர இசை கலைஞரான இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இந்த நிலையில்தான் இவரது பேரன்களான காசிம்- பாபு சகோதரர்கள் 29 ஆண்டுகளுக்கு முன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான்களாக நியமிக்கப்பட்டனர். அந்தப் பணியை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதி தொடர்ந்து ஏழுமலையானுக்கு இசை சேவை செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆகிய கோயில்களில் பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இறைவன் முன் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பை தேவஸ்தானத்திடம் இருந்து காசிம் – பாபு சகோதரர்கள் பெற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், சிருங்கேரி சங்கர மடம், காஞ்சி காமகோடி மடம் ஆகியவற்றிற்கும் ஆஸ்தான வித்வான்களாக இருந்து வருகின்றனர்.
தங்களுடைய ஏழாவது வயது முதல் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொண்டதாகக் கூறும் காசிம்- பாபு சகோதரர்கள் 17-வது வயதில் இருந்து பொது மேடைகளில் நாதஸ்வரம் வாசித்து வருவதாகவும் இசையில் ஆர்வம் கொண்டுள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இலவசமாக இசை பயிற்சி அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இன, மத வேறுபாடின்றி திருப்பதி ஏழுமலையானை பலரும் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய சகோதர்கள் இருவர் இசையின் மூலம் ஏழுமலையானுக்கு பல வருடங்களாக தொண்டாற்றி வருவது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.