கனமழை எச்சரிக்கையை அடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மழை வெள்ளம் மற்றும் பேரிடர்களை எதிர் கொள்ளும் வகையில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், இங்கு 24 மணி நேரமும் பொது மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில், அவசர கட்டுபாட்டு மையமும் செயல்படுகிறது. தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் நேரடி தொடர்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.