உத்தரகாண்டில் அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்குள் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கடந்த மார்ச்சில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், அதற்கான விதிகளை வகுக்க கமிட்டி ஒன்றை உத்தரகாண்ட் அரசு உருவாக்கியது.
அந்த கமிட்டி விரிவான ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப்பித்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் 9-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்படுவதால், அதற்குள் பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.