ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் சோனமார்க் என்னும் இடத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒரு மருத்துவர் மற்றும 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள், ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பலர், புலம்பெயர் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, சில நாட்களுக்கு முன்பு ஷோபியான் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவானது மற்றும் கோழைத்தனமானது என கூறியுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை தப்பவிட மாட்டோம் எனவும், நமது பாதுகாப்பு படையின் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும், தனது எக்ஸ் தள பதவில் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தாக்குதல் நடைபெற்ற சோனமார்க் பகுதியில் அதிகளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.