கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை – சின்ன திருப்பதி இடையேயான சாலையை 3 வாரங்களில் சீரமைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணத்தை அடுத்து, கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, அடுத்த விசாரணையின்போது ஆஜராவதில் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு விலக்களித்த நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 19 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.