குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
குஜராத் காந்திநகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றம் நடத்தி வந்துள்ளார். அவரது நீதிமன்றத்தில் பல போலி வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் பணியில் இருந்துள்ளனர்.
தன்னிடம் வரும் வழக்குகளில் ஒரு தரப்பினருக்கு ஆதராக தீர்ப்பளித்து லஞ்சமாக பணம் பெறுவதை சாமுவேல் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், பால்டி என்ற பகுதியில் உள்ள அரசு நிலம் தனக்கு சொந்தமானது என கூறி, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கை விசாரித்த போலி நீதிபதியான சாமுவேல், வழக்கம்போல மனுதாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். மேலும், ஒருபடி மேலே சென்று, இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
உண்மை நிலவரம் தெரியாமல், மனுதாரர் அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தபோதுதான், அந்த உத்தரவு போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.