புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான தகுதிப்பட்டியல் வெளியானாலும் கூட உரிய ஆவணங்களுடன் தாமதமாக விண்ணப்பித்த மாணவியை கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் 1964ம் ஆண்டு முன் பிறந்த பட்டியலினத்தவர்களுக்கு பூர்வகுடி பட்டியலினம் என்றும் மற்றவர்கள் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் எனவும் வகைப்படுத்தி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவி ஸ்ரீநிஜா மருத்துவ படிப்பில் சேர்வதற்காக பட்டியலின பிரிவில் தகுதியான விண்ணப்பத்துடன் விண்ணப்பித்தும், புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் பிரிவில் பங்கேற்றதால் எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடம் கிடைக்காமல், பல்மருத்துவ படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து வில்லியனூர் தாசில்தார், ஸ்ரீநிஜாவுக்கு, அவரின் தாயாரின் ஆவணங்கள் அடிப்படையில் பூர்வீக பட்டியலினம் என்ற சாதி சான்றிதழை வழங்கினார்.
இதன் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி ஸ்ரீநிஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மாணவி ஸ்ரீநிஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், புதுச்சேரி உயர்கல்வி மாணவர் சேர்க்கைகான சென்டாக்கின் விதியை கருத்தில் கொள்ளாமல், தனி நீதிபதி முடிவெடுத்திருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையேற்ற சென்னை உயர்நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மருத்துவ கலந்தாய்வில் மாணவி ஸ்ரீநிஜா கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.