கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி மூட்டை என நினைத்து 15 லட்சம் ரூபாய் பணம் கொண்ட மூட்டை விற்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் அரிசி மூட்டை ஒன்றில் 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், இவரது கடையில் பணிபுரியும் சீனிவாசன் என்பவர், கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் அரிசி மூட்டை என நினைத்து 15 லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்த மூட்டையை விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த கடையின் உரிமையாளர் சண்முகம், வாடிக்கையாளரின் வீட்டை கண்டுபிடித்து நேரில் சென்றுள்ளார்.
அரிசி மூட்டைக்குள் 10 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்ததாக வீட்டிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிசி மூட்டைக்குள் 15 லட்சம் ரூபாய் இருந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து காவல்நிலையத்தில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.