மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா தலா 85 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ரௌத், தொகுதி எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலையில் 270 தொகுதிகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மீதமுள்ள தொகுதிகள் குறித்தும் விரைவில் முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.