போக்குவரத்துறையில் வேலை தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல் 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அவர்களில் சிலர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து, அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.