தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 9-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் கெலவரப்பள்ளி அணை பகுதியில் 12 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரியில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவானது.
இதன் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து, 3 ஆயிரத்து 438 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி பிரதான மதகுகள் மூலம் வினாடிக்கு 3 ஆயிரத்து 313 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு 9-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. மேலும் கிருஷ்ணகிரி அணைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.