சென்னை மாநகர பேருந்தில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவத்தில் பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகன்குமார் என்பவர் மாநகர பேருந்தில் தடம் எண் 46ஜி வழித்தடத்தில் நடத்துநராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் பணியில் இருந்த போது, அண்ணா ஆர்ச் பேருந்து நிறுத்ததில் நின்றது.
அப்போது பேருந்தின் முன்பக்கமாக ஏறிய பயணி ஒருவரிடம் ஜெகன்குமார் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது நடத்துநர் ஜெகன்குமாரின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடத்துநர் ஜெகன்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த சக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூரை சேர்ந்த கோவிந்தன் என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ,கொலை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.