சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாமி தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் என கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசனம் செய்ய முடியும் என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
கோயில்களில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா எனவும் கேட்டனர்.
இம்மனு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோயில் இணை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.