டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தொடர்ந்து 8-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். அப்போது மரபுப்படி குடியரசுத் தலைவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்தினார்.
முன்னதாக நிதி அமைச்சகத்தின் வெளியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் சென்றடைந்தவர், அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2025-26-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற அலுவல்களை ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.