ஆவடி அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது இரும்பு தூண் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 7 வயது மகன் ஆட்விக், ஆவடி விமானப்படை பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
விமானப்படை குடியிருப்பில் உள்ள மைதானத்தில் ஆட்விக் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால்பந்து இரும்பு கோல் போஸ்ட் சிறுவனின் தலை மீது விழுந்துள்ளது. இதில், படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.