ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 945 கிலோ பீடி இலைகளை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை கடல்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், 2 வாகனங்களில் இருந்த பீடி இலைகளை படகில் ஏற்றப்படுவதை கண்டனர்.
அப்போது, போலீசாரை கண்டதும் படகில் ஏற்றப்பட்ட பாதி பீடி பண்டல்களுடன் இருவர் கடலுக்குள் தப்பி சென்றுவிட்டனர். இதனை தொடர்ந்து கரையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 945 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.