ஆத்துார் அருகே 7ஆம் வகுப்பு மாணவிக்கு மாணவர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே அரசுப் பள்ளியில், கடந்த ஜனவரி மாதம் 22 அன்று, ஏழாம் வகுப்பு மாணவி, அந்தப் பள்ளி மாணவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியில் தெரியாமல் இருக்க, அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும், திமுகவைச் சேர்ந்த ஜோதி என்ற நபர், கடந்த 20 நாட்களாக, காவல்துறையில் புகார் அளிக்காமல் தடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேறு வழியின்றி, மாணவியின் பெற்றோர், குழந்தைகளுக்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்த பிறகே, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளிப்பதைத் தடுத்து தாமதப்படுத்திய திமுகவைச் சேர்ந்த ஜோதி என்ற நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதுமே, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் இருக்கின்றன. இதனைத் தடுக்கவோ, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய தலைமுறையை உருவாக்கும் தமிழகப் பள்ளிகள், மிகுந்த பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்போதுதான் தனது துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வார் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.