போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
மலேசியாவைச் சோ்ந்த பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அந்நாட்டு சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பன்னீா் செல்வம் பரந்தாமனை இன்று தூக்கிலிட சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா். இதற்கு எதிராக மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பன்னீர் செல்வத்தின் தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.