சிவகங்கை புத்தக திருவிழாவில் நடனமாடிய நபர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அருகில் உள்ள அரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த 53 வயதான நடன ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விழாக் குழுவினர், உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேஷ் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.