ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் மற்றும் பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கல்லீரல் பிரச்னை காரணமாக, வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னை சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நாகேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில், கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து நாகேந்திரனை பரிசோதித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவ குழுவின் அறிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் எந்த விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிடவில்லை எனக்கூறி நாகேந்திரனின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.