இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில் மீன்பிடிக்கச் சென்ற 42 மீனவர்களையும் அவர்களின் 8 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக கஞ்சி தொட்டி திறந்தும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் நூதன போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, இலங்கை அரசு சிறைபிடித்துள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத்தினர் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், மத்திய அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.