சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
ஆனால், கடனை திரும்பச் செலுத்தாததால், ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் டி.ரவீந்திரன் உத்தரவிட்டார்.
ஆனால் படத்தின் அனைத்து உரிமைகளையும் துஷ்யந்த் தரப்பு வழங்காததால், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சிவாஜி கணேசனின் வீட்டிற்கும் தனது மகன் துஷ்யந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.