பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா, தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை கல்பனாவின் மகள் மறுத்துள்ளார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட கல்பனாவுக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
44 வயதான கல்பனா, பிரபல பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் டி.எஸ். ராகவேந்திராவின் மகள் ஆவார். இசை பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த காரணத்தால், இயல்பாகவே இசைஞானம் பெற்றிருந்தார். ஐந்தாவது வயதிலேயே, தனது இசை பயணத்தைக் தொடங்கினார். தனது 6 வயதில், நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘புன்னகை மன்னன்’ படத்தில் கல்பனா நடித்தார்.
2010 ஆம் ஆண்டு, மலையாளத்தில் ஒளிபரப்பான ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் பங்கேற்ற கல்பனா, ஸ்டார் சிங்கர் டைட்டில் வின்னர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தெலுங்கு சீசன் ஒன்றிலும் கல்பனா பங்கேற்றிருந்தார்.
என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில், போடா போடா புண்ணாக்கு பாடலின் மூலம், பின்னணி பாடகியானார். தொடர்ந்து, தாஜ்மகால் படத்தில், திருப்பாச்சி அரிவாளா என்ற பாடல், ரஜினி முருகன் படத்தில் ஜிகுரு ஜிகுரு பாடல், மாமன்னன் படத்தில் கொடி பறக்கிற காலம், காஷ்மோரா படத்தில் ஓயா ஓயா பாடல் என பல வெற்றிப்படங்களில், பாடகி கல்பனா பாடியிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு, 36 வயதினிலே திரைப்படத்தில், போகிரேன் பாடலுக்காக, கல்பனாவுக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான திரைப்பட விருதை, தமிழ்நாடு மாநில அரசு வழங்கி கௌரவித்தது. 2018 ஆம் ஆண்டில் “நவமூர்த்தளைநாட்டி” பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான நந்தி விருதையும் பெற்றுள்ளார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட திரையுலகிலும், பிரபலமான பின்னணி பாடகராக கல்பனா ராகவேந்தர் திகழ்ந்து வந்தார். கிட்டத்தட்ட 1500 திரைப்பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள கல்பனா, கிட்டத்தட்ட 3,000 மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தான் கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கல்பனா வசித்து வருகிறார்.
கல்பனாவின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தததால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் கல்பனாவின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். வீட்டின் உள்ளே இருந்து யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் கல்பனாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உறவினர்களும் தொலைப்பேசி மூலம் கல்பனாவைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். அப்போதும் கல்பனாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வேலை விஷயமாக சென்னை வந்திருந்த கல்பனாவின் கணவருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
அவரும் கல்பனாவைத் தொடர்பு கொள்ள தொலைபேசியில் அழைத்துள்ளார். அவருக்கும் கல்பனாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து, உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.
விரைந்து வந்த காவல்துறையினர் கல்பனாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். கட்டிலில் மயங்கிக் கிடந்த கல்பனாவை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கல்பனாவுக்குச் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி ,கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்பனா எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார் ? அதுபற்றி கல்பனா கடிதம் ஏதாவது எழுதி வைத்திருக்கிறாரா ? கல்பனாவை யாராவது தற்கொலைக்குத் தூண்டினார்களா ? இப்படி பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கெனவே தனது 15 வயது மகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்பனா கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கல்பனாவின் தங்கை ஷகீனா ஷான் (Shakhinah Shawn) தங்கையின் கணவர் ஜான் ஜெஷில் (Shawn Jazeel), ஷகீனா ஷானின் கணவரின் உறவினர் ஒருவரின் மகன் கிளாரோ (Claro) மற்றும் Alive Church பாதிரியார் Henry Paul ஆகியோர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்பனா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கு இந்த பிரச்சனையும் காரணமா ? என்ற கோணத்திலும்விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தனது தாய் தூக்க மாத்திரை உட்கொள்வது வழக்கமான நடைமுறை தான் என்று அவரது மகள் விளக்கமளித்துள்ளார். மருத்துவர் ஆலோசனைப்படி தனது தாய் தூக்க மாத்திரை எடுத்து கொண்ட நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் கல்பனாவின் மகள் கூறியுள்ளார்.