கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக அவருக்கு ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், நடராஜன் ஆஜராகவில்லை. இந்த நிலையில், வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன், கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் கொலை, கொள்ளை சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. சசிகலா குடும்பத்திற்கு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நெருக்கமானவர் என கூறப்படுவதால், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் உள்பட இதுவரை சுமார் 250 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் வாக்குமூலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.