மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, மதுபான ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஒரு வாரகாலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட இதர அலுவலகங்களில் நடந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக கூறினார்.
அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக அரசு இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று கூறி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.